The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

நன்றி

Image credit:kamna.webdunia.com

நன்றியோடு வாழ்வதிலே இன்பம் காணுவோம்
நல்வினையால் நானிலத்தை மகிழச் செய்குவோம்

தினையளவு நன்றியையும் பனையாய எண்ணுவோம்
துன்பத்திலே துணையிருப்போர் அன்பைப் பேணுவோம்

நன்றியென்ற சொல்லினுக்கு பெருமை கூட்டுவோம்
நன்றிகெட்ட மனிதர்களை ஓரம் கட்டுவோம்

காலத்திலே கைகொடுத்தோர் காலைப் பற்றுவோம்
காலமெல்லாம் அவர் புகழை போற்றி மகிழுவோம்.


சுகமான உறக்கம்


Image credit: National Gallery,Bangkok

தூளியிலேயே அமளி செய்த குழந்தை இவள்.
சிறு சத்தம் கேட்டா லே கால்களை வெளியே விட்டு சிணுங்குவாள்..

பள்ளிப்பருவத்தில் " உலகம் உருண்டை" என்பதை மெய்ப்பித்தவள்
அதாவது, கிழ-மேற்காக உறங்கச்செல்பவள், வட-தெற்காக எழுவாள் !

கல்லூரிப்பருவத்திலோ, தலையோடு கால் போர்த்தித் தூங்குவாள்.
ஏன் என்றால் வார இறுதியில் பகலவன் பகைவனாம் !

மணப்பெண் ஆனாள்! இவள் அதிர்ஷ்டம், சென்ற இடத்தில் இவள்
மனம்போல உறங்கி எழ யாரும் தடைசெய்யவில்லை.

இப்படியெல்லாம் சுகமாக உறங்கியவள்,
இன்று வயிற்றின் சுமை, அழுத்தம்,
அதிர்வு தாங்காமல்
இப்படியும் அப்படியும் புரண்டுகொண்டே இருக்கிறாள்!

மிக விரைவில் தாயாகப்போகும் அவளுக்கு,
இது சுகமான உறக்கத்தின் முடிவின் ஆரம்பமல்லவா?
என்று பரிதவித்தது என் தாய் மனம்!